செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவு பெண்களின் காரை துரத்திய இளைஞர்கள்

Makkal Kural Official

இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

சென்னை, ஜன. 29–

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு காரில் வந்த பெண்களை மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை திமுக கட்சிக்கொடி பொறுத்திய காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார். இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கானாத்தூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.அந்த புகாரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்ட அவர், வாலிபர்கள் வந்த 2 கார்களில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு காரில் கட்சிக் கொடி ஒன்று கட்டப்பட்டு இருந்தததையும், தங்களை மிரட்டிச் சென்றதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். மிரட்டியதோடு இல்லாமல் தங்களின் வீடு வரை பின்தொடர்ந்து வந்து பயமுறுத்தியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இந்த சம்பவம் 25–ந் தேதி இரவு நடந்துள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகார் மனு, வீடியோ காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் 8 பேர் கொண்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *