செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: தலைமை காவலர் உயிரிழப்பு

Makkal Kural Official

கிருஷ்ணகிரி, ஜூன் 29–

கிருஷ்ணகிரியில் இரவுநேர கண்காணிப்பு பணியில் இருந்த தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளரான மகாலிங்கம், தலைமைக் காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் என்கிற மில்டன், போச்சம்பள்ளி ஏழாம் அணி பயிற்சிக் காவலர் சுகுமார் ஆகியோர் நேற்று இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சமயத்தில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோட்டூர் மாரியம்மன் கோயிலில் தணிக்கை செய்து, கையொப்பமிட்டு மத்தூர் பகுதியில் தணிக்கை செய்ய தலைமை காவலர் மில்டன் மற்றும் பயிற்சி காவலர் சுகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம், குடகிலிருந்து புதுச்சேரிக்கு கோவில் சிலைகள் செய்ய கிரானைட் கற்கள் பாரம் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி மீது, அதன் பின் தொடர்ந்து வந்த இரும்பு பாரம் ஏற்றிய லாரி மோதியது.

இதில் நிலைதடுமாறிய டாரஸ் லாரி, காவலர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தலைமை காவலர் மில்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இரவுநேர கண்காணிப்பின்போது சாலை விபத்தில் சிக்கி தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *