கிருஷ்ணகிரி, செப். 11–
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமன்தொட்டி கிராமத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 15 கோடி ரூபாய் சாலை பணிகளை தொடங்கி வைக்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமியை திமுக ஒன்றிய செயலாளர் நாகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
திமுக உறுப்பினர்களை கண்டித்து கே.பி.முனுசாமி தலைமையில், அசோக்குமார் எம்எல்ஏ, ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் மற்றும் கர்நாடக மாநில துணைச்செயலாளர் பி.ராஜா உட்பட அண்ணா திமுகவினர் 500க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சங்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட அண்ணா திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை மறியல் போராட்டம் நான்கு மணி நேரம் நீடித்தது. பின்னர் கே.பி.முனுசாமி முன்னிலையில் சாலை பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.