தயார் நிலையில் இந்திய கடற்படை:
ஸ்ரீநகர், ஏப். 27–
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.
அரபிக்கடலில் இந்திய கடற்படை எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூஞ்செயலில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்–இ–தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் மறைமுக உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாட இந்திய ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் போலீசார் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீநகர் பகுதியில் உள்ள சபாகடல், சவுரா, பாண்டச் பெமினா, ஷால்டெங், லால் பஜார் மற்றும் ஜாடிபால் உள்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதனிடையே உளவுத்துறை தகவல்களின் பேரில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள முஷ்தகாபாத் மச்சில் செடோரி நாலா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து நவீன ரக எந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தேடுதல் வேட்டையின்போது புல்வாமா மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் லஷ்கர்–இ–தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.
10 பயங்கரவாதிகளின்
வீடுகள் இடிப்பு
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதிகள் 10 பேரின் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில் புல்வாமா மாவட்டத்தின் முரான் பகுதியில் அக்சன் உல் ஹக் ஷேக் வீடும், சோபியான் மாவட்டத்தின் சோதிபோராவில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதியான ஷாஹித் அகமது குட்டாயின் வீடும், குல்காம் மாவட்டத்தின் மதல்ஹாமா பகுதியில் ஜாகிர் அகமது கனி வீடும் இடித்து தகர்க்கப்பட்டன. இவர்கள் 3 பேரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள்.
அடில் உசேன் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரது வீடுகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீடுகளில் இருந்த குண்டுகள் வெடித்தது. இதில் அந்த வீடுகள் தரைமட்டமாகின. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் அடில் உசேன் தோகர் முக்கியமானவர் என்று கருதப்படுகிறது.
மேலும் கலாரூஸில் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பரூக் அகமதுவின் வீடு பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளப்பட்டது.
ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதி முகமது ஷபியின் மகன் அட்னான் சபி, பந்திப்பேராவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பயங்கரவாதியான ஜமீல் அகமது ஷீர், காசிபோரா ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி அமீர் நசீர் வானி மற்றும் சோட்டிபோரா கிராமத்தில் தளபதி ஷாஹித் அகமது குட்டே ஆகியோரின் வீடுகள் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டன.
எல்லையில் பாகிஸ்தான்
மீண்டும் தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதையடுத்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தனது ராணுவத்தினரை குவித்து வருகிறது.
கடந்த 24-ந்தேதி இரவு கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இந்தியாவும் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது. விடிய, விடிய இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. நேற்று முன்தினம் இரவும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்திய நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நேற்று இரவு நடத்தியது. டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் மண்டலங்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல்கள் நடத்தி எதிர்வினையாற்றி யிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய போர்க்கப்பல்
ஏவுகணை சோதனை
அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள பதிவில், போர் கப்பல்களிலிருந்து அச்சுறுதல்களாக வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகையில் இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. தொலைதூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன. நமது நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எவ்வித அச்சுறுத்தல்கள் எந்நேரம் எந்த வகையில் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடல் வழி தாக்குதல்களை எதிர்கொள்ளவும் சண்டையிடவும் கடற்படை தயார் நிலையில் இருப்பதை மேற்கண்ட ஒத்திகை வெளிக்காட்டுகின்றது.