சென்னை, செப்.13-
காவிரியில் நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடகாவுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை ஆகியவற்றின்படி நீர்ப்பற்றாக்குறை வருடங்களில் நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் குறைபாடு விகிதாச்சாரத்தின்படி பகிர்ந்து கொள்ளவேண்டும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் மழையளவு குறைந்து இருப்பினும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரின் அளவை குறைபாடு விகிதாச்சாரத்தின்படி கணக்கிட்டாலும், அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவை விட குறைவாகவே தண்ணீர் வழங்க 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு வருகின்றன.
அதையும் அளிக்க கர்நாடகா மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது சுப்ரீம் கோர்ட் ஆணையை மீறும் செயலாகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது, கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம்.சி. ஆக உள்ளது. சுமார் 10 டி.எம்.சிக்கு மேல் செப்டம்பர் மாதத்தில் மழைநீர் கிடைக்கும். இதுதவிர, வடகிழக்கு பருவ மழை காலத்திலும், இந்த 4 அணைகளுக்கு குறைந்தது 30 டி.எம்.சி. நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அணைகளில் இருந்து 13ந் தேதி (இன்று) முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 6.48 டி.எம்.சி. நீர் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது பற்றாக்குறை விகிதாச்சாரப்படி பார்த்தாலும் மிகக் குறைவு தான். இதையும் அளிக்க முடியாது என கர்நாடக மந்திரி கூறியிருப்பது எந்த விதத்திலும் நியாயம் அல்ல.
சுப்ரீம் கோர்ட் ஆணையின் படி ஓராண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு 6.75 டி.எம்.சி. மட்டுமே. இதற்காக காவிரியில் இருந்து எடுக்க வேண்டிய நீரின் அளவு 33.75 டி.எம்.சி. என்றாலும், அதில் குடிநீர் பயன்பாட்டிற்கு பிறகு காவிரி படுகையில் கர்நாடகா திரும்ப அளிக்க வேண்டிய நீர் 27 டி.எம்.சி. ஆகும். நிலைமை இவ்வாறு இருக்க, குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலே ஆகும்.
கர்நாடக மூத்த மந்திரி இருமாநில விவசாயிகளின் நலன்களை கருதாமல் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த பிரச்சினையை எடுத்துக்கூறி காவிரி நீரை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.