புதுடெல்லி, டிச.21-
காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள காலி மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வுகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
அது தொடர்பான ஒரு மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:-
நாடு கடுமையான டாக்டர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் போது, விலைமதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணாகிவிடக்கூடாது. எனவே, காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வை நடத்தவும், டிசம்பர் 30-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கை செயல்முறையை முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம்.
எந்த கல்லூரியும் நேரடியாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படாது. மாநில சேர்க்கை அதிகாரிகள் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அதேசமயம் சிறப்பு கலந்தாய்வு சேர்க்கை செயல்முறை ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட சேர்க்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்பதையும், காத்திருப்புப் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே சேர்க்கை செய்யப்படும் என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.