தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை
சென்னை, அக். 23–
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, திங்கள்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து நேற்று காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டாணா புயலாக மாறியது
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:–
‘ஒடிசா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு தெற்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு- தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். வடக்கு ஒடிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக (டானா) மாறி வெள்ளிக்கிழமை 25 ந்தேதி காலை கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.