செய்திகள்

கார் , லாரி நேருக்குநேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

Makkal Kural Official

சிதம்பரம், செப். 12

சிதம்பரம் அருகே இன்று அதிகாலை கார் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் துபாயில் இருந்து அழைத்துவரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை பார்ப்பதற்காக முகமது அன்வர் தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். இவர்கள் அனைவரும் சென்னையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்த்து நலம் விசாரித்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இவர்கள் வந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த யாசர் அராபத் (38) என்பவர் ஒட்டி வந்தார். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கின. காரில் பயணித்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்த யாசர் ஹராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி ஸ்ரீ கண்டபுரம் ஹாஜியார் தெருவைச் சேர்ந்த ஹாஜிதா பேகம் (62), திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சராபாத் நிஷா (30) மற்றும் 3 வயது அப்னான் என்ற சிறுவன் உள்பட 5 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் தேடிவருகின்றனர். விபத்து நடந்த நெடுஞ்சாலை மேம்பாலம் ஒருவழிப் பாதையாக இருக்கிறது. ஆனால், போதிய எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புக் கட்டைகள் வைக்கவில்லை. இப்போது விபத்து நடந்த பிறகு அந்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் அவசர அவசரமாக தடுப்புக் கட்டைகளை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *