போபால், செப் 2
மத்திய பிரதேச மாநிலத்தில் கையில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியதில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
சிந்த்வாரா மாவட்டத்தில் கல்கோட்டி திவாரி என்ற கிராமத்தில் வசிப்பவர் ஹர்த்யால் சிங். கூலித்தொழிலாளியான இவர் தமது மனைவியுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது 9 வயது மகன் வீட்டில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது செல்போன் சார்ஜ் போட்டபடியே நண்பர்களுடன் கார்ட்டூன் பார்க்க அந்த சிறுவன் ஆரம்பித்தான். சிறுது நேரத்தில் கார்ட்டூனில் அவர் மூழ்கி இருந்தபோது, திடீரென அந்த செல்போன் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வீட்டில் டமால் என்று சத்தம் கேட்க, பீதி அடைந்த ஹர்த்யால் சிங், தமது மனைவி மற்றும் உறவினர்களுடன் அங்கு ஓடி வந்துள்ளார். அங்கே 9 மகன் 2 கைகளில் பலத்த காயங்களுடன் கதறி கொண்டிருந்தார்.
உடனடியாக மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பின்னர் சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கைகள், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால் தொடர் சிகிச்சை அவசியம் என்றும் அவர்கள் கூறினார்கள்.