செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் 344 ஏரிகள் நிரம்பின

Makkal Kural Official

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

சென்னை, டிச.2–

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கனமழை கொட்டியது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை–தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஏரிகளின் நீர்மட்டம் விவரம் வருமாறு:–

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். இன்று காலை நிலரப்படி 2,738 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு தொடர்ந்து 1479 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து குடிநீர் தேவைக்காக 125 கன அடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இதில் தற்போது 916 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 3500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக 27 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 137 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் 2,718 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 996 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 209 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பாதி அளவு தண்ணீர்

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும். இதில் தற்போதைய நீர்மட்டம் 324 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து 50 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 15 கன அடியாகவும் உள்ளது.

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கன அடி ஆகும். இதில் தற்போதை நீர்மட்டம் 1124 மில்லியன் கன அடியாக உள்ளது. 980 கன அடி நீர்வரத்து, அப்படியே திறந்து விடப்படுகிறது.

அந்த வகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கனஅடி ஆகும். இப்போது 7,957 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 10,718 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

344 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதில் மொத்தம் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தின் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 528 ஏரிகளில் 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 163 ஏரிகள் 75 சதவீதமும், 160 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நீர் நிரம்பியுள்ளன. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 78 ஏரிகள் 75 சதவீதமும், 124 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 1,155 ஏரிகளில் 231 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், நீர்வளத் துறையின் கீழ் உள்ள 574 ஏரிகளில் 154 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 581 ஏரிகளில் 77 ஏரிகளும் முழுமையாக நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரிகளில் 263 ஏரிகள் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 3,296 குளம், குட்டைகளில் 516 குளம், குட்டைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 706 குளம், குட்டைகளில் 75 சதவீதம் நீர் இருப்புள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *