கள்ளக்குறிச்சி, பிப்.23,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றியம், வெள்ளிமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் பொருளாதார மேம்பாட்டிற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா தெரிவித்ததாவது:
தமிழக அரசின் பழங்குடியின நலத்துறையின் சார்பில் கல்வராயன்மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பழங்குடியினரின் தேவைகள் குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு அரசின் திட்டப் பயனாளிகளை சந்தித்து அரசு திட்டங்களின் மூலம் குடும்பத்தின் பொருளாதார மேம்பாடு குறித்தும் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வெள்ளிமலையிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கல்வராயன்மலைப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்ட உருவாக்க செயலாக்கத்திற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி, சுகாதாரம், பட்டா, வேளாண்மை, தொலைத்தொடர்வு வசதிகள், சுயதொழில் வாய்ப்புகள், நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கல்வராயன்மலையில் பழங்குடியினர் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு மற்றும் இன்றையதினம் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வின் மூலம் கல்வராயன்மலைப் பகுதி மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ற வகையிலான திட்டங்கள் குறித்தும் கேட்டறியப்பட்டது.மேலும் கல்வராயன்மலைப் பகுதி மக்களின் விவசாயம் மற்றும் இப்பகுதிக்கு ஏற்ற தொழில்களைத் தொடங்கி இப்பகுதியில் உள்ளவர்களுக்கு அவர்களின் வாழ்விடங்களிலேயே புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தேவையான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து அதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச.அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலர் க.கார்த்திகேயனி, பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம், கால்நடைத் துறை உதவி இயக்குநர் மரு.கந்தசாமி, சேர்மன் சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.