சென்னை, பிப். 9–
கள்ளமில்லா மாணவர்களிடையே கர்நாடகாவில் எழுப்பப்படும் மதவாத விஷச்சுவர், தமிழ்நாட்டுக்கும்
வந்துவிடக் கூடாது என கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்திலுள்ள அரசுக் கல்லூரி ஒன்றில், இந்துத்துவாவை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அபிமான மாணவர்கள் சிலர், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவி உடை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளும் வெடிக்க ஆரம்பித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை முன்வைத்து வருகின்றனர்.
கவனமாக இருக்க வேண்டும்
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது, தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” எனப் பதிவிட்டுள்ளார்.