பெங்களூரு, ஜூலை 26–
கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படப் போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி அறிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் களத்தில், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும் குமாரசாமியின் தந்தையுமான எச்.டி.தேவகவுடா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தேவகவுடா பரபரப்பு
2024 நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும், இந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கட்சி தனித்து போட்டியிடும். எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பிறகு கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார்.
மகனும் தற்போதைய கட்சி தலைவருமான குமாரசாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவகவுடா கூறிய கருத்து கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.