பெங்களூர், ஜன. 24–
கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதிப், புலி, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர்.
கொரோனாவால் கர்நாடக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை அம்மாநில அரசு இந்த வாரம் வெளியிட்டிருந்தது.
இதில் 2019ல் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான பயில்வான் படத்துக்காக சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விருதை ஏற்க மறுத்து நடிகர் கிச்சா சுதீப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,”கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான பிரிவில் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பது மரியாதையாக கருதுகிறேன். தேர்வுக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே விருதுகள் பெறுவதை நான் நிறுத்திக் கொண்டேன். திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த விருதை நான் பெறுவதைவிட அவர்களில் ஒருவருக்கு வழங்கினால் மகிழ்ச்சி. விருதை எதிர்பார்க்காமல் மக்களை மகிழ்விப்பதை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறேன். தேர்வுக்குழு என்னை தேர்ந்தெடுத்தது மேலும் ஊக்குவிக்கிறது. தேர்வுக்குழு மற்றும் மாநில அரசிடம் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.