ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிப்பு
சென்னை, பிப்.15-–
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சென்னை கல்பாக்கம் அனல்மின் நிலையத்திடமிருந்து 330 மெகாவாட் மற்றும் கர்நாடகாவில் உள்ள கைகா அனல்மின் நிலையத்தில் இருந்து 196 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்திற்கு 526 மெகாவாட் மின்சாரம் வருகிற 15 ஆண்டுகளுக்கு தடையின்றி கிடைக்கும் என்று தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மின் கொள்முதல் ஒப்பந்தமானது, தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், கல்பாக்கம் அனல் மின்நிலைய இயக்குனர் வினோத்குமார், கர்நாடக மாநில கைகா அனல்மின்நிலைய இயக்குனர் சேஷய்யா முப்பராஜி மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குனர் மாஸ்கர்னஸ் இடையே மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று பரிமாறிக்கொள்ளப்பட்டது.