செய்திகள்

கர்நாடகாவில் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: காய்கறி, பழங்கள் விலை உயர வாய்ப்பு

Makkal Kural Official

ஒசூரில் காத்திருக்கும் நூற்றக்கணக்கான லாரிகள்

ஒசூர், ஏப். 15–

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், கர்நாடக எல்லையான ஒசூரில் நூற்றக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு குறித்து இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். அந்த வகையில் கர்நாடக லாரி உரிமையாளர்கள் 14–ந் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் கர்நாடகத்தில் அனைத்து லாரிகளும் வேலை நிறுத்தம் செய்துள்ளன. இந்த போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் பங்கேற்றுள்ளதால் மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால், தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் உள்பட, அனைத்து லாரிகளும் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழக லாரி உரிமையாளர்கள்

ஆதரவு

கர்நாடக வழியாக தமிழகத்திற்கு வர வேண்டிய லாரிகளும் அந்த மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ஒசூரில் இருந்து 2000க்கும் மேற்பட்ட கனிம வளங்கள், ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருள்கள் கர்நாடகத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும், தமிழகத்தில் விளையும் காய்கறிகள், கேரளம் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தத்தால், தினமும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் 4,000 லோடு காய்கறிகள், அரிசி, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடைபடும்.

தென்னிந்தியா முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சி. தனராஜ் கூறுகையில், “தினமும் 20,000 லாரிகள் கர்நாடகா வழியாக செல்கின்றன. அதில் 2,000 லாரிகள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன. செவ்வாய்க்கிழமை காலை முதல் நாங்கள் எந்த வண்டியையும் அனுப்ப மாட்டோம். நாங்கள் ஆதரவாக இருந்தாலும், எங்கள் வண்டிகளின் பாதுகாப்பு முக்கியம்” என்றார்.

காய்கறி, பழங்கள்

விலை உயருகிறது

கொய்யா மற்றும் வெங்காயம் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளும் கர்நாடகாவில் இருந்து வருகின்றன. இந்த வேலைநிறுத்தத்தால், மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வழியாக வரும் வண்டிகளும் தடைபடலாம். குறிப்பாக, நாசிக்கில் இருந்து வரும் வெங்காய லாரிகள் தடைபட்டால், வெங்காயத்தின் விலை மேலும் உயரலாம் என்று வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, தீப்பெட்டி, மஞ்சள், முட்டை, கறிக்கோழி, இரும்பு தளவாடங்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. பால், மருந்து பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும் லாரிகள் மட்டும் இயக்க அனுமதிக்கபபடுகிறது.

இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பூண்டு, எண்ணை வகைகள், வெங்காயம், பருப்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே 700 சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீத லாரிகளில் தக்காளி, பீட்ரூட், கோஸ், கேரட் ஆகியவை சென்னை உள்பட பல்வேறு மார்க்கெட்களுக்கு கொண்டு வரப்படுகிறது.லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் வரத்து பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அதற்கான விலை உடனடியாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வேலை நிறுத்தத்தை ரத்து

செய்ய வேண்டும்

கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. மாநில அரசின் சிறிய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்னர். புதுச்சேரியை தவிர கர்நாடகாவில் தான் டீசல் விலை தென்னகத்திலேயே மலிவானது. பொது நலனுக்காக வேலை நிறுத்தத்தை அவர்கள் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *