செய்திகள்

கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Makkal Kural Official

வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மாநில அரசுக்கு 6 வாரம் அவகாசம்

பெங்களூரு, ஏப் 3–

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பைக் டாக்ஸி சேவைகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின், மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூருவில் ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாக ஓலா தரப்பில் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு உடனடியாக தடை விதித்து 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்தபின் மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதி பி.எம். ஷயாம் பிரசாத் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். நீதிபதி சொல்லியிருப்பதற்கு ஏற்ப வழிமுறைகளை உருவாக்குவோம். கொடுத்திருக்கும் அவகாச காலத்திற்குள் வழிமுறைகளை தீர்மானித்து அறிவிப்போம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

2024 ஏப்ரலில் ஓலா சர்வீசைத் துவக்கியது. ரோப்பன் நிறுவனம் (ரேபிடோவின் மூல நிறுவனம்) 2016லிருந்து சர்வீசைத் துவக்கியுள்ளது. வெள்ளை நிறத்தில் எழுதப்பட்ட நம்பர் பிளேட்டுகளை (தனியார் வாகனங்கள்) வைத்துக் கொண்டு 2 சக்கர வாகனங்களை (பைக்) ஓட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று மாநில போக்குவரத்து அறிவித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் நூற்றுக் கணக்கில் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்த பைக்குகள் ஓடவதால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதும் நினைவிருக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *