ஓசூர், ஜன. 7–
கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகா – தமிழக எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் கணிகாணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் கண்டறியப்பட்டுள்ள எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 8 மாதம், 3 மாத குழந்தை என இருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு மிக அருகாமையிலுள்ள, தமிழக எல்லையான ஓசூரை சேர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர், பல்வேறு தேவைகளுக்காக தினமும் பெங்களூரு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால், தமிழக எல்லையை உஷார்படுத்தி, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
இது குறித்து, ஓசூர், மாநகர நல அலுவலர் அஜிதா கூறுகையில், ஓசூரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் காய்ச்சலுக்கு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோர் குறித்த விபரங்கள் பெறப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை என்றார்.