பெங்களூரு, ஆக. 30–
கர்நாடகாவிலிருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவு 6398 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரின் அளவை விட குறைவான அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், உரிய அளவு நீரை தரவேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டத்திலும், நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டத்திலும், மேற்கண்ட கோரிக்கையையே தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வைத்து வந்தனர்.கடந்த 4 மாதங்களில் மட்டும் 45 டிஎம்சி அளவில் தண்ணீரை தரவேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
6,398 கனஅடியாக உயர்வு
இதனைத் தொடர்ந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டு இருந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து காவிரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து சற்று அதிகரித்த நிலையில், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது . கிருஷ்ணராஜசாகர் அணையில்இருந்து தமிழ்நாட்டிற்கு நேற்று வரை 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 4,398 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதே போல, கபினி அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்றும் அதே அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்துவிட படும் தண்ணீரின் அளவு 6,398 கனஅடியாக உயர்ந்துள்ளது.