செய்திகள்

கன்னியாகுமரியில் ஆழிப்பேரலையை எதிர்கொண்டு கம்பீரமாக நின்ற திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா

Makkal Kural Official

சென்னை, டிச.30-

திருவள்ளுவர் சிலை ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பது போல தமிழ்நாடும் தடைகளை தகர்த்து முன்னேறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதையொட்டி அவர் நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து திருவள்ளுவருக்கு புகழ் சேர்த்த தலைவர் கருணாநிதி, இந்தியாவின் தென் எல்லையாக உள்ள தமிழ்நாட்டின் குமரி முனையில் உள்ள பாறையில் திருக்குறளில் உள்ள அதிகாரங்களைக் குறிக்கின்ற வகையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்திற்கான சிலையை நிறுவி, 1.1.2000 அன்று திறந்து வைத்தார்.

வானுயர் வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட அந்த நொடியில், உங்களில் ஒருவனான நான் உள்பட அத்தனை பேரும் மெய்சிலிர்த்து நின்றோம்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ந்தேதி சுனாமி தாக்குதல் ஏற்பட்டபோது, வள்ளுவர் சிலையின் தலை வரை ஆழிப்பேரலை எழுந்தபோதும், அதனை எதிர்கொண்டு எவ்வித சேதாரமுமின்றி கம்பீரமாக நின்றார், திருவள்ளுவர்.

காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட திருவள்ளுவர் சிலைக்கு, கருணாநிதியால் இந்தியாவின் தென் எல்லையில் நிறுவிய தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு. இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கவிருக்கும் சிலைக்கு, பேரறிவுச் சிலை எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது நம் திராவிட மாடல் அரசு.

கண்ணாடி பாலம்

பொதுவாழ்வுக்கும், தனி வாழ்க்கைக்கும் துணை நிற்கும் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை இளந்தலைமுறைத் தமிழர்களும் போற்றிடும் வகையில் பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா கன்னியாகுமரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சிறப்போடு நடைபெறவிருக்கிறது.

வெள்ளிவிழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும், அருகே இருக்கும் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

கடல் நடுவே கண்ணாடிப் பாலம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. நவீனத் தொழில்நுட்பத்தில் கடல் நடுவே அமைந்துள்ள இந்த கண்ணாடிப் பாலத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கவிருக்கிறேன்.

தடைகளை தகர்த்து முன்னேறும்

உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல, தமிழ்நாடும், தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும். பேரறிவுச் சிலையாகப் பெயர் பெற்றுத் திகழும் திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும். திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாக கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *