செய்திகள்

கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீது வரி மூலம் ஆண்டுக்கு ரூ.2400 கோடி வருவாய்

Makkal Kural Official

புவியியல் துறை ஆணையர் தகவல்

சென்னை, ஏப் 8–

கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரிச் சட்டத்தின்படி தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.2400 கோடி வருவாய் கிடைக்கும்.

இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘’தமிழ்நாடு கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரி சட்டம் – 2024’’ என்ற புதிய சட்டம் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்தின்படி கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீது வரி விதிக்கவும் அதனை வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டம் அரசிதழ் எண் 79, நாள் 20.02.2025-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ‘’தமிழ்நாடு கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரி விதிகள், 2025’’ என்கிற புதிய விதியினை தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டுள்ளது. இவ்விதிகள் அரசிதழ் எண் 155, நாள் 4.4.2025-ல் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி 32 கனிமங்களுக்கு வரி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது பெருங்கனிம குத்தகைதாரர்களால் சுரங்கம் செய்து எடுத்து செல்லும் பெருங்கனிமங்களுக்கு ராயல்டி, மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி, தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை நிதி மற்றும் வருமான வரி ஆகியவை செலுத்தப்படுகின்றன.

சிறுகனிம குத்தகைதாரர்களால் குவாரி செய்து எடுத்துச் செல்லப்படும் சிறுகனிமங்களுக்கு உரிமத்தொகை, மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி, பசுமை விதி மற்றும் வருமான வரி ஆகியவை செலுத்தப்படுகின்றன. குத்தகைதாரர்களால் செலுத்தப்படும் மேற்கண்ட இனங்கள் தவிர தற்போது 4.4.2025 முதல் கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரியினை கூடுதலாக செலுத்த வேண்டும்.

களி மண் கனிமத்திற்கு

குறைந்த வரி…

இச்சட்டத்தில் கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான அதிகபட்ச வரியாக சிலிமனைட் கனிமத்திற்கு டன் ஒன்றிற்கு ரூ.7000 மற்றும் குறைந்தபட்ச வரியாக களி மண் கனிமத்திற்கு டன் ஒன்றிற்கு ரூ.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரிச் சட்டத்தின்படி தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.2400 கோடி வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *