சென்னை, நவ. 27–
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மற்றும் அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை, நாகை, புதுச்சேரி அருகே உள்ளதால் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.மழை தொடர்ந்த நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.இந்த நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பல்வேறு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளில் (சிவகங்கை , இராமநாதபுரம் மாவட்டங்களில்) இன்று நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.