டெல்லி, அக். 16–
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு முக்கிய காரணம் அமித்ஷாவும், ‘ரா’ அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரும்தான் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தியர்கள் அதிக அளவில் குடியேறி வசித்து வரும் நாடுகளில் கனடாவும் ஒன்று. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த நிஜ்ஜார், 90களில் கனடாவுக்கு சென்றுவிட்டார். அவர், ஒரு கட்டத்தில் சீக்கிய மதம் சார்ந்த இயக்களுடன் இணைந்தார். இந்த இணைப்பு அவரை ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ எனும் அமைப்பை நோக்கி நகர்த்தியது. இந்த அமைப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.
இது சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துகிறது. எனவே நிஜ்ஜாரை விசாரிக்கவும், அவரை இங்கு அழைத்து வரவும் இந்தியா முயற்சித்தது. இதற்கு கனடா ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
தங்கள் நாட்டின் குடிமகன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளாத கனடா, தீவிர விசாரணையை தொடங்கியது. விசாரணையில் இந்திய தூதரக அதிகாரிகளின் பெயர் அடிப்பட்டிருப்பதாக கனடா கூறியது. அத்துடன் நிற்காமல் இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடாவிலிருந்து வெளியேற்றியது.
சீர்குலைந்த உறவு
பதிலுக்கு கனடா நாட்டின் தூதரை இந்தியா வெளியேற்றியது. இப்படியாக இரு நாட்டுக்கு இடையில் இந்த கொலை பெரும் பிளவை ஏற்படுத்தியது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த பிரச்னையெல்லாம் ஓரளவு தீர்ந்து, உறவில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், மீண்டும் இந்த பிரச்னையை கனடா தற்போது கிளறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூரில், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் கனடாவின் பாதுகாப்பு ஆலோசகர் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் பேசிய விஷயங்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்டு செய்தி ஊடகம் சில விஷயங்களை தெரிவித்திருந்தது. அதாவது, குஜராத் சிறையில் இருக்கும் பிரபல மாஃபியா தலைவன் பிஷ்னோயின் ஆட்கள்தான், நிஜ்ஜார் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கனடா தகவல்களை பகிர்ந்திருந்தது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய மற்றொரு விஷயம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கனடாவில் நடந்த வன்முறைக்கு இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரும், ரா எனும் உளவு அமைப்பின் முக்கிய புள்ளி (அமித் ஷா) ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. இது குறித்து இந்தியா தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.