கதைகள் சிறுகதை செய்திகள்

கண்காணிப்பு….! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அந்தத் திருடர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்த வீட்டில் தான் யாருமே இல்லையே? பிறகு எப்படி இத்தனை சரியாக சொல்கிறான்? நாம போட்டிருக்கிற சட்டை ,செய்யும் வேலை அத்தனையும் சரியாக சொல்கிறானே? ஒருவேளை கேமரா இருக்குமா? கேமரா இருந்தாலும் எங்கிருந்து பாத்திட்டு இருக்கான் “

என்று குழம்பிப் போய் இருந்தார்கள் அந்த திருடர்கள்.

” டேய் திருட்டு பசங்களா? இப்போ நீங்க திருடன எல்லாத்தையும் எங்கெங்க எடுத்தீங்களோ அதே இடத்தில் வைக்கணும் .இல்ல . தொலைச்சுடுவேன்”

என்று குரல் மட்டும் கேட்டது

” என்னடா இது? எங்கிருந்து பேசுறாங்க. ஒன்னும் தெரியலையே? ஸ்பீக்கர் ஏதும் வச்சிருக்காங்களா? “

என்று சுத்திச் சுத்தி பார்த்தார்கள் திருடர்கள் .வெளியே தப்பி செல்ல முடியாத அளவிற்கு எல்லா கேட்டுக்களும் சென்சாரில் மூடப்பட்டன. வெளியும் போக முடியாது. இப்ப என்ன பண்றது? “

என்று விழித்தார்கள் திருடர்கள்

” சார் நாங்க பண்ணது தப்புதான். எங்களை மன்னிச்சிடுங்க. எங்களை வெளிய விடுங்க .நாங்க போகணும் “

என்று கதறினார்கள் திருடர்கள்.

” அதெல்லாம் முடியாது . நீங்க கலச்சு போட்டு இருக்கிற என் வீடு கோயில் மாதிரி இருந்துச்சு. எங்கெங்க என்னென்ன இருந்ததோ? அத அப்படியே அங்க வைக்கணும் ,இல்ல நீங்க வேற மாதிரியான இடத்துக்கு போக வேண்டி இருக்கும் “

என்று பயமுறுத்தி வந்தது அந்தக் குரல்

” சார் நாங்க என்ன பண்ணனும் சார். எல்லா பொருளையும் அந்தந்த இடத்தில நாங்க வச்சிட்டோம்.. நீங்களே செக் பண்ணி பார்த்துக்கோங்க சார்”

என்று ஒரு திருடன் சொல்ல

“இல்ல அந்த சாமி சிலை அந்த பீரோ கிட்ட இருந்தது. அந்த பீரோ கொஞ்சம் தள்ளி இருந்தது. மீன் தொட்டி பக்கத்துல ஒரு சாமி சிலை . ஐம்பொன் சிலை இருந்துச்சு .அத யார் வச்சிருக்கா தெரியுமா ? அந்தக் கருப்பு சட்ட போட்டு இருக்கானே ? அவன் தான் வச்சிருக்கான். அத எடுத்து வைக்க சொல்லு”

என்று அந்தக் குரல் சொல்ல

“டேய் வச்சிருடா “

என்று கருப்புச் சட்டை போட்டவனை திட்டினான், ஒரு திருடன்

” தன்னிடம் இல்லை” என்று தலையைச் சொரிந்த அந்தக் கருப்புச் சட்டைத் திருடனைப் பார்த்த இன்னொரு திருடன்

“அதான் கரெக்டா சொல்றாங்களே? கருப்பு சட்டை போட்டவன்னு , சிலையை எடுத்து வைடா. இல்ல நாம வெளிய போக முடியாது”

என்று அந்தத் திருடன் சொல்ல

கருப்புச் சட்டை திருடன் செய்வது அறியாது தன் பையில் இருந்த அந்தச் சிலையை எடுத்து வைத்தான்.

” சரி இப்ப நாங்க போகலாமா? “

என்று திருடர்கள் கேட்க

“முடியாது இன்னும் சில விஷயங்களை நீங்க பண்ண வேண்டி இருக்கு “

” என்ன பண்ணனும் ? சொல்லுங்க சார்”

” நீங்க பாத்ரூம் போயிட்டு சரியா தண்ணி ஊத்தல பாத்ரூம்ல தண்ணி ஊத்துங்க. “

“சரிங்க சார் .வேற “

” நீங்க தொட்ட இடத்தில் எல்லாம் அங்கங்க அழுக்கா இருக்கு. அதை தொடச்சு விடுங்க . “

“சரிங்க சார் “

“வீட்டக் கழுவி விடணும்டா திருட்டு பசங்களா ? நீங்க வந்த என் வீடு இப்ப அழுக்காயிடுச்சு. அதனால வீட்டு கழுவி விடுங்க. “

“சரிங்க சார் “

என்று வீடு மொத்தமும் கழுவி விட்டார்கள் .

“வேற என்ன செய்யணும் சார்”

என்று கேட்க

“அந்த சாமிச் படத்துக்கிட்ட விபூதி, பத்தி சூடமெல்லாம் இருக்கு. அதை எடுத்து கொளுத்தி சாமி கும்பிடுங்க “

என்று சொல்ல

” என்ன சார் இது. நாங்க கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதிங்க ” எங்களப் போயி சாமி கும்பிடச் சொல்றீங்களே ? “

என்று திருடர்கள் சொல்ல

” டேய் சொல்றத செய்யுங்க. சொல்றத செய்யல, வேற மாதிரி இடத்துக்கு நீங்க போக வேண்டி இருக்கும் “

என்று அந்தக் குரல் அரட்டியது

சரி வேற வழி இல்ல என்ற அந்தத் திருடர்கள் ,சாமி படத்திற்கு அருகில் இருந்த சூடம், பத்தியை எடுத்துக் கொளுத்தி சாமி கும்பிட ஆரம்பித்தார்கள்

” இப்ப நீங்க உக்கி போடணும் “

என்று சொல்ல

“என்னது உக்கி போடணுமா ? “

” ஆமாடா செஞ்ச தப்புக்கு தண்டனை வேண்டாமா ? ஆளுக்கு 108 தடவை உக்கி போடணும்”

என்று அந்தக் குரல் சொல்ல

“என்னது 108 தடவையா ? .வீட்டில என்னால படில ஏறி இறங்க முடியாது இதுல 108 தடவை நான் ஏறி இறங்கணுமா ? முடியாது”

என்று அந்தத் திருடர்கள் சொல்ல

” இப்ப நீங்க உக்கி போடல. வேற இடத்துக்கு போக வேண்டியது இருக்கும்? “

என்று மறுபடியும் அந்தக் குரல் பயமுறுத்தியது .

“என்னடா இது ? வம்பா போச்சு? எவ்வளவோ இடத்தில நாம திருட போயிருக்கிறோம் .இப்படி ஒரு டார்ச்சர் அனுபவிச்சதே இல்ல. யாருடா இவன், நம்ம கையில மட்டும் கிடைச்சான குரல் வலைய புடிச்சு கடிச்சு கொன்னே புடு ணும்”

என்று திருடர்கள் பொறும

” டேய் ரொம்ப அவசரப்படுறீங்க யாராவது பூட்டி இருக்கிற வீட்டுக்குள்ள வருவாங்களா ? திருட வந்ததே தப்பு இதுல வேற கோவப்படுறீங்களா?

என்று அந்தக் குரல் எகிற வேறு வழியின்றி 108 தடவை உக்கி போட்டார்கள், திருடர்கள்.

“சரி இப்பயாவது போகலாமா ? “

என்று அந்தத் திருடர்கள் கேட்க

“போக முடியாது”

என்று அந்தக் குரல் சொன்னது

1சார் நாங்க தான் திருடல .எடுத்த பொருளை எல்லாம் அதே எடத்தில் வச்சிட்டோம் .மன்னிப்பும் கேட்டாச்சு உக்கியும் போட்டாச்சு. இப்பவாவது விடுங்க சார்”

என்று திருடர்கள் கதற ,அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது

யாரு இந்த நேரம் கதவத் திறக்கிறது?

என்று திருடர்கள் விழிக்க எதிரில் போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்

1 நீங்கதான் திருட வந்த நல்லவங்களா?”

என்று போலீஸ்காரர்கள் கேட்க

“நாங்க திருட வரல சார் .இந்த வீட்டை சுத்தம் பண்ண வந்திருக்காேம். அதான் இந்த வீட்டுல செஞ்சிருக்கோம் .பாருங்க “

என்று திருடர்கள் சொல்ல ,வீடு பளபளப்பாக இருந்தது.

” ஆமா சுத்தம் பண்ண தான் வந்து இருக்கீங்க. இருந்தாலும்ஆள் இல்லாத வீட்டுக்குள்ள நுழையுறது தப்பு இல்லையா? “

என்று போலீஸ்காரர்கள் சொல்ல

” ஆமா சார் தப்பு தான். ஆனா இந்த மாதிரி ஒரு வீட்ட நாங்க பார்த்ததே இல்ல சார் . நாங்க திருடர்கள்ங்கிற மரியாதையே போச்சு. “

என்று திருடர்கள் சொல்ல வீட்டு உரிமையாளர் நெதர்லாந்தில இருக்கிறாங்க. நீங்க தேனி பக்கத்துல இருக்கிற வீட்டுல திருடி இருக்கிறீங்க? நெதர்லாந்தில இருந்து, அவர் வீட்டில கேமரா வச்சு எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட்டு தான் இருக்காங்க.

என்று போலீஸ்காரர் சொல்ல

” என்னது நெதர்லாந்தா? டெக்னாலஜி ரொம்ப டெவலப் ஆயிருச்சு. இனிமே நாம திருடனும்னா இவனுக டெக்னாலஜியை விட பெருசா ஏதாவது பண்ணிட்டு தான் இனிமே திருட வரணும் இல்ல, நம்மள எந்த வீட்டிலும் திருட விடாம திருத்திடுவாங்க,

என்று அந்த திருடர்கள் சொல்ல

“சார் இவர்களை கூட்டிட்டு போங்க அடிக்காதீங்க புத்தி சொல்லி அனுப்புங்க பொழைக்கிறதுக்கான வழியை சொல்லுங்க. திருடக்கூடாதுன்னு திருக்குறளை சொல்லுங்க படிக்கட்டும் .தன்னுடைய உழைப்பில் தான் வாழனும்ங்கிற ஒரு விதியை சொல்லிக் கொடுங்க.

என்று குரல் வர, திகைத்து நின்றார்கள், திருடர்கள்.

Loading

One Reply to “கண்காணிப்பு….! – ராஜா செல்லமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *