ஒட்டாவா, ஜன. 07–
கனடா நாட்டை சேர்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தேர்ந்தெடுக்கும் புதிய நபர் பிரதமராக பதவியேற்பார் எனக் கூறப்படுகிறது.
கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நாட்டு பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தனது பதவியை ராஜினமா செய்ய முடிவு செய்துள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.
புதிய தலைவரை தேர்வு செய்த பின்னர் ராஜினாமா செய்து விடுவேன். இதற்கான வேலைகளில் ஈடுபடுமாறு லிபரல் கட்சியின் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
நான் ஒரு போராளி
மேலும் பேசுகையில், நான் ஒரு போராளி. எனது உடலில் உள்ள ஒவ்வொரு எலும்பும், கனடா மக்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இரு என எப்போதும் சொல்லி கொண்டே இருக்கும். இந்த நாட்டிற்காக எந்நேரமும் சிந்தித்து கொண்டே இருப்பேன். கனடா மக்களுக்கு எது தேவையோ அதை செய்வதில் ஆர்வம் காட்டுவேன்.
கனடா அரசியல் வரலாற்றில் மைனாரிட்டி நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இதனால் அதன் பணிகள் முடங்கியுள்ளன. எனவே தான் இன்று காலை கவர்னல் ஜெனரலுக்கு ஒரு ஆலோசனை வழங்கினேன். நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். இந்நிலையில் தான் வரும் மார்ச் 24ஆம் தேதிக்கு கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் எனது குடும்பத்தினருடன் நீண்ட உரையாடலை நிகழ்த்துவேன்.
எனது எதிர்காலம் பற்றி மனம் விட்டு பேசுவேன். எனது வாழ்க்கையில் இதுவரை நான் சாதித்ததற்கு எனது குடும்பத்தினர் தான் காரணம். அவர்களின் ஊக்கத்தால் தான் இதுவரை வந்திருக்கிறேன். நேற்று இரவு டின்னர் சாப்பிடும் போது கூட, என்னுடைய ராஜினாமா முடிவு பற்றி எனது பிள்ளைகளிடம் தெரிவித்தேன்.
இன்றைய தினம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். வரவிருக்கும் தேர்தல் எனக்கு பிரகாசமான வாய்ப்புகளை வழங்காது என்று கருதுகிறேன். உள்ளுக்குள் நிறைய போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனவே அடுத்த தேர்தலில் சரியான தலைவரை இந்த நாடு தேர்வு செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.