இஸ்லாமாபாத், ஏப்.16–
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 286 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன.
கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவித்து வருகிறார்கள். பாகிஸ்தானிடம் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.
இதனால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் இஷாக்தார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.77 அதிகரித்து ரூ.286.77-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186.07-க்கு விற்கிறது.
அதே வேளையில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. டீசல் லிட்டர் ரூ.193-க்கும், லைட் டீசல் ரூ.174.68-க்கும் விற்பனை ஆகிறது.