சென்னை, நவ. 26–
பொங்கல் நாளில் நடைபெற இருந்த சி.ஏ.தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் சி.ஏ. என்றழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் படிக்கும் மாணவர்களுக்கான, அடிப்படைத் தேர்வுகள் (பவுண்டேசன் கோர்ஸ்), தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 28 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேர்வுகள் பொங்கல் பண்டிகையான ஜனவரி 14-ல் Business laws மற்றும் உழவர் திருநாளான ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததுஇந்த நிலையில், தமிழர் பண்டிகை நாட்களில் பட்டயக் கணக்காளர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்வர்களுக்கு சிரமமின்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது.
சி.ஏ. தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை; ஐ.சி.ஏ.ஐ. என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு நடத்துகிறது. அவ்வமைப்பு தான் தேர்வுக்கான தேதியை தீர்மானித்து அறிவிக்கிறது. மற்றபடி நிதி அமைச்சகத்துக்கும், இந்த நடைமுறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்வு தேதிகளை மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல், மகரசங்கராந்தி ஆகிய பண்டிகைகள் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், அன்றைய தினம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 16ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.