செய்திகள்

கடலூர் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா ஆய்வு

Makkal Kural Official

கடலூர், ஏப்.16–

குறிஞ்சிப்பாடி வட்டம், ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டுவெளி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 300 சதுரஅடி அளவில் ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 41 தொகுப்புகள் மற்றும் 2 தனிவீடுகள் என மொத்தம் 166 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா நேரில் ஆய்வு செய்தார்.

—-கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பூவாணிக்குப்பம், ஆதிநாராயணபுரம், கண்ணாடி, ரெங்கநாதபுரம், சிந்தாமணிக்குப்பம், பெரியகண்ணாடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா தெரிவித்ததாவது:–

மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.36,000 மதிப்பீட்டில் பூவாணிக்குப்பம், ஆதிநாராயணபுரம் மற்றும் கண்ணாடி பகுதிகளில் குழந்தைகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையிலும், சுற்றுப்புற சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையிலும் குழந்தைநேய உட்கட்டமைப்பு கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

பூவாணிக்குப்பம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் ஒரு வீட்டின் மதிப்பு தலா 6,73,000 வீதம்ரூ.6.73 கோடி மதிப்பீட்டில் 100 வீடுகள், நுழைவுவாயில் மற்றும் பெரியார் சிலை போன்ற சிறப்பம்சங்களுடன் மொத்தம் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தரமாக மேற்கொள்வது குறித்தும், விரைவுப்படுத்துவது குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், பயனாளிகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு உதவிடும் பொருட்டு மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் பயானாளிக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவியும், தகுதியிருப்பின் மகளிர்சுயஉதவிக்குழு மூலம் ரூ.50,000 கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசியப் பொருட்களை தரமான முறையில் குறைந்த விலையில் வழங்கிட வேண்டும் என்பதற்காக நியாயவிலைக் கடையின் மூலம் பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பெரியகண்ணாடி நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ள பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வூராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *