கடலூர், நவ. 5
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 462 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய தினம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.9.3 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்திற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட தாட்கோ மேலாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.