கடலூர், ஏப்.18-
கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ஒரு சிறந்த விடியலின் மாற்றங்களை நோக்கி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் “பெண் குழந்தைகளை காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டம் குறைந்துவரும் குழந்தை பாலின விகிதம் பிரச்சினையை தீர்க்க மற்றும் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துதல், பாதுகாத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் ஆண், பெண் சமத்துவத்தை உறுதி செய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும்.
நாட்டில் பெண் குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்களில் “பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள மருங்கூர் கிராமத்தில் “தேசிய பெண் குழந்தைகள் தினம்” தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து “பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி அளவில் மாணவிகளுக்கு நடந்த மினிமாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவிகளுக்கும், பெண் குழந்தைகளின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய காவல் துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அவர்களது சேவையை பாராட்டி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கினார்.
மேலும் பெண் குழந்தைகள் வளர்ப்பில் சிறப்பாக பங்களிப்பு செய்த பெற்றோர்களின் குழந்தைகள், குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், கைம்பெண்களின் பெண் குழந்தைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு ‘செலக்சன் ஆப் சாம்பியன் பட்டம்’ என்ற அடிப்படையில் பெண் குழந்தைகள் கிரீடம் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் அனு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நல்லதுரை, கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட சமூக நல கண்காணிப்பாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.