செய்திகள்

கடன் வாங்கி மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Makkal Kural Official

சென்னை, ஜன.12-–

தி.மு.க. அரசு கடன் வாங்கியே மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குகிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில், ‘பெப்பர் ஸ்பிரே’ அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை பெண்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர், எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-–

2021–-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. அறிவித்த அறிவிப்புகளில் 20 சதவீத அறிவிப்புகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. 80 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. அதில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு பெற்று தரப்படும் என்பது முக்கியமான அறிவிப்பாகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

ஓராண்டு தான் இருக்கிறது எப்போது நீட் தேர்வை ரத்து செய்வீர்கள் என்று சட்டசபையில் கேட்டேன். அதற்கு, எங்களிடம் ஒன்றும் கிடையாது, கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. மத்திய அரசு தான் ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசால்தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று நாங்கள் சொல்லும் பொழுது எங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏளனமாக பேசினார். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இதுதான் தி.மு.க.வின் இரட்டை வேடம்.

கடன் வாங்கி மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இப்படியே கடன் வாங்கினால் அந்த கடனை எப்படி திருப்பிக் கொடுப்பார்கள்? 2024-–25–-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் அதிகரித்துள்ளது. இவ்வளவு வருவாய் வரும்போது எதற்காக கடன் வாங்கி மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது? தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 4 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 394 கோடி கடன் வாங்கியுள்ளார்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நாங்கள் யாருடைய பெயரும் குறிப்பிடவில்லை. அமைச்சர்கள் அறிக்கை விடும்போது தான் எங்களுக்கு சந்தேகம் அதிகமாகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஒரு முக்கிய புள்ளி தொடர்பு இருக்கிறது. அதனால் தான் யார் அந்த சார்? என்று கேட்கிறோம். இந்த விவகாரத்தில் ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுவிட்டால் தி.மு.க. ஏன் ஆட்சியில் இருக்கிறது? சீமான் பெரியார் பற்றி பேசியது வருத்தத்திற்குரியது. மறைந்த தலைவர் பற்றி தரக்குறைவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *