செய்திகள்

ஓய்வு அறிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி; கிரிக்கெட்டில் எனது பயணம் தொடரும்: அஸ்வின் பேட்டி

Makkal Kural Official

சென்னை, டிச. 19–

ஓய்வு அறிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான், கிரிக்கெட்டில் எனது பயணம் தொடரும் என்று சென்னை விமான நிலையத்தில் அஸ்வின் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அங்கம் வகித்தார். 3வது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார். இதன் மூலம் அவரது 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் புகழாரம் சூட்டினர்.

இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் வீட்டிற்கு சென்ற அஸ்வினை அவரது தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினர் கட்டியணைத்து, முத்தமிட்டு வரவேற்றனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அஸ்வின் கூறியதாவது:-

இவ்வளவு பேர் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்க வில்லை. நான் வந்து அப்படியே வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி. 3வது டெஸ்ட்டின் 4ம் நாளில் ஓய்வு முடிவை எடுத்தேன். கடந்த காலங்களில் இரவு தூங்கும்போது விளையாடிய போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியது, ரன்கள் அடித்தது எல்லாம் ஞாபகம் வரும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அப்படி ஒன்று ஞாபகம் வரவில்லை. அதுவே ஒரு தெளிவான அறிகுறி; நாம் இனி அடுத்த பாதைக்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். ஓய்வு அறிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.

எனது பயணம்

தொடரும்

அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும்; சும்மா இருப்பது கடினம்தான். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். அடுத்த பயணத்தை இனிதாக தொடங்க வேன்டும். கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று தான் நினைக்கிறேன். சி.எஸ்.கே., அணிக்காக என்னால் முடிந்த வரை விளையாடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *