சென்னை, அக். 26
1976ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர்களாக சேர்ந்து சென்னையில் பணிபுரிந்து, எஸ்பி மற்றும் ஏடிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது. முதலில் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்து மகிழ்ந்தனர்.
பின்னர் மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி வள்ளிநாயகம், தமிழக காவல்துறை தென் மண்டல முன்னாள் ஐஜி கேபி சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 1976ம் ஆண்டு தமிழக காவல்துறையில் எஸ்ஐக்களாக சேர்ந்து சென்னை நகரில் திறம்பட பணியாற்றி ஏடிஎஸ்பி மற்றும் எஸ்பியாக பதவி உயர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் டைகர் தயாநிதி (ஏடிஎஸ்பி), நைனார் முகமது, நசீர் அகமது, பட்டாபி, சேதுராமலிங்கம், சந்திரபாசு, சுப்பையா, வில்வராணி முருகன், விஜி பன்னீர் செல்வம், ஆலம்பாடி பன்னீர், ராஜேந்திரன், பிவி தாமஸ், கே.கே. ராஜரத்தினம், சித்தன்னன் (முன்னாள் அடையாறு துணைக்கமிஷனர்) , கலியமூர்த்தி (முன்னாள் திருச்சி எஸ்பி), மாதவன், குணசேகரன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் ஏடிஎஸ்பி அனுஷ்யா, டிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (இவர்கள் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பந்தோபஸ்து பணியின் போது படுகாயமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
இந்நிகழ்ச்சியில் நடந்த மெல்லிசை நிகழ்ச்சியில் முன்னாள் ஏடிஎஸ்பி டைகர் தயாநிதியின் பேத்திகள் பிரபஞ்சனா மற்றும் 4 வயது நிரஞ்சனா ஆகியோர் பாடல்கள் பாடி அசத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி டைகர் தயாநிதி செய்திருந்தார்.