சென்னை, மார்ச் 25–
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், முகமது தௌபிக் என்ற கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழுகையை முடித்துவிட்டுச் சென்ற ஜாகீர் உசேன் கடந்த மார்ச் 18ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இவ் வழக்கு தொடர்பாக திருநெல்வேலி நகரம் தொட்டிபாலத் தெருவைச் சேர்ந்த மகபூப்ஜான் மகன் பீர்முஹமது (37) என்பவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி நகர காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், நகர முன்னாள் உதவி ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் சரியாக நடவடிக்கை எடுக்காததே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலைக்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மீது குற்றம்சாட்டி ஜாகீர் உசேன் வெளியிட்ட விடியோ பதிவும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இதனிடையே, காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் உதவி ஆணையரும், தற்போதைய கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையருமான செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்தது. இந்நிலையில் ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது