செய்திகள்

ஓமன் எண்ணெய் கப்பல் விபத்தில் 9 பேர் மீட்பு; 6 பேரை தேடும் பணி தீவிரம்

Makkal Kural Official

ஓமன், ஜூலை 19–

ஓமன் எண்ணெய் கப்பல் விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேடப்படும் 6 பேர் பட்டியலை கப்பல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஓமன் நாட்டின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் எனும் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகமானது நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களின் மையமாகி இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தின் ஒரு பகுதியாக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் கொமொரோஸின் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலானது ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் கப்பல் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர் மாயமாகியதாக தகவல் வெளியானது. இவர்களில் 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேரும் அடக்கம்.

எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்பட்டன.

6 பேரை தேடும் பணி தீவிரம்

இந்த கப்பல் 117 மீட்டர் நீளத்துடன் எண்ணெய் பொருட்களை ஏற்றி செல்ல கூடிய வகையில் 2007-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் எண்ணெய் டேங்கர் மூழ்கி, தலைகீழாக இருந்துள்ளது. இந்த விபத்தின் மூலம் கடலில் எண்ணெய் கசிந்ததாக என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இதனை அடுத்து கப்பலில் இருந்து காணாமல் போன இந்தியர்களை மீட்பதற்காக இந்திய போர் கப்பல் மற்றும் விமானம் ஓமன் கடல் பகுதிக்கு விரைந்தது.

இந்த நிலையில் ஓமன் நாட்டில் விபத்துக்குள்ளான எம்டி பிரஸ்டீஜ் பால்கான் கப்பலில் பயணித்தவர்கள், மீட்கப்பட்டவர்கள், தேடப்பட்டு வருபவர்களின் பட்டியலை கப்பல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 8 மாலுமிகளும், இலங்கையைச் சேர்ந்த ஒரு மாலுமியும் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளார். மாயமான மேலும் 6 பேரை இந்திய கப்பற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *