பெங்களூரு, ஏப். 14–
சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் ஓபிசி இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்த கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிடம் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கொடுத்திருந்தார். இந்த அறிக்கை கர்நாடகா கேபினட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
51 சதமாக உயர்த்த பரிசீலனை
அதன்படி, கர்நாடகத்தில் தற்போது ஓபிசி பிரிவினருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கு இனி 51 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே அந்த மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு உள் ஒதுக்கீடும், எஸ்.சி., எஸ்டி பிரிவினருக்கு 24 விழுக்காடும் இட ஒதுக்கீடு உள்ளது.
இதன் மூலம் கர்நாடக அரசின் இடஒதுக்கீட்டு விகிதம் 85 விழுக்காடாக உயர இருக்கிறது. அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் மாநிலத்தின் மக்கள் தொகையில் 70 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருப்பது தெரியவந்தது. இதனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.