சென்னை, மே 6–
சென்னை கோயம்பேடு அருகே தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சென்னை டீலக்ஸ் என்ற தங்கும் விடுதியில் சந்தேகத்தின் பேரில் சிஎம்பிடி போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது 216 எண் கொண்ட அறையில் கைத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 8 போலி தோட்டாக்கள் இருந்தது.
துப்பாக்கி, கை விலங்கு
மேலும் அதே அறையில் ஒரு கை விலங்கு, ஒரு லீடிங் செயின் மற்றும் கோபுர கலசத்திற்கு உபயோகிக்கக்கூடிய மூன்று செம்பு பாத்திரங்கள், கருப்பு அரிசி 50 கிராம் மற்றும் போலி அடையாள அட்டைகள் உட்பட ஆகியவையும் இருந்தது. அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றி அறையில் தங்கி இருந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர்கள், பெங்களூரைச் சேர்ந்த சிவா, கேரளாவைச் சேர்ந்த குபாப், ஜித்து, இர்ஷாத் என்பது தெரிந்தது. இவர்கள் எதற்காக துப்பாக்கி வைத்ருந்தார்கள்? இரிடியம் மோசடி கும்பலா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.