செய்திகள்

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: பொதுமக்கள் பார்வையிட பிர்லா கோளரங்கில் ஏற்பாடு

Makkal Kural Official

சென்னை, ஜன. 22–

வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் இன்று வரவுள்ளன. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த அரிய நிகழ்வைக் காண சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களை பூமியில் இருந்தபடி வானில் ஒருசேர பார்ப்பது மிக அரிய நிகழ்வாகும். அத்தகைய நிகழ்வைக் காணும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி, செவ்வாய் கோள்களை அவ்வப்போது நேரடியாக பார்க்க முடியும். ஆனால் இன்று வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன் மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அதிகாரிகள் கூறியதாவது:–

வானில் ஒரே நேர்கோட்டில் வரவுள்ள 6 கோள்களை இன்று மாலை 6 மணி முதல் இந்த மாதம் இறுதி வரை காண முடியும். சூரியன் மறைவுக்குப் பிறகு முதல்கட்டமாக வெள்ளி மற்றும் சனி கோள்கள் தென்படும். அதன்பிறகு செவ்வாய் மற்றும் வியாழன் கோள்கள் தென்படும். இந்தக் கோள்களை வெறும் கண்களில் காண முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை தொலைநோக்கி அல்லது நவீன பைனாகுலர் வாயிலாக மட்டுமே காண இயலும்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன. ஆனால் நான்குக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவது மிகவும் அரிதானது.

இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் இன்று முதல் 25ம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *