செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

‘ஒரு கை பார்ப்போம்’: ஸ்டாலின் ஆவேசம்

Makkal Kural Official

234 தொகுதிகளிலும் வென்று 7வது முறையாக ஆட்சி

சென்னை, ஏப். 30–

நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி ஒரு கை பார்ப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த. வேலுவின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:–

நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நான் நிறைவாக காவல்துறை மானியக் கோரிக்கையில் பதிலளித்துப் பேசும்பொழுது தமிழ்நாட்டைப் பற்றி சொல்லும்போது, தமிழ்நாடு ஏற்கெனவே எப்படி இருந்தது. இப்போது எப்படி மாறியிருக்கிறது, வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிட்டு சொல்வதற்காக ஒரு உதாரணத்தை சொன்னேன். ஊர்ந்துகொண்டிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு கம்பீரமாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னேன்.

அதற்கு, எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் உதயகுமார், நான் பேசி முடித்தபோது, அதோடு விட்டிருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. நான் பேசியது அப்படியே போய் இருக்கும். வெளியிலும் வந்திருக்காது. பிரபலமாக இந்த செய்தியும் வந்திருக்காது. தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். நான் பேசி முடித்ததற்குப் பிறகு எழுந்து சபாநாயகரைப் பார்த்து முதலமைச்சர் சிறப்பாக பேசினார். தெளிவாகப் பேசினார். அழகாகப் பேசினார். ஆனால், இடையில் “ஊர்ந்து வந்து” என்பதை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார். நான் உடனே கேட்டேன். ஊர்ந்து என்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். குழந்தைகள் தவழ்ந்து வருவது தவறா? என்று சொன்னேன். ஏற்கனவே, எஸ்டிபிஐ மாநாட்டில் இதே எடப்பாடி பழனிசாமி, அவரின் புகழைப் பற்றி பேசுகின்றபோது, அவர் எப்படியெல்லாம் முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என்பதற்கு அவரே பேசியிருக்கிறார். நான் தவழ்ந்து, தவழ்ந்து, தவழ்ந்து படிப்படியாக வந்து முதலமைச்சராக வந்திருக்கிறேன் என்று அவரே பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. நான் நேற்றுதான் பார்த்தேன். முன்பே பார்த்து இருந்தால் சட்டமன்றத்தில் சொல்லியிருப்பேன்.

எதற்காக சொல்கிறேன் என்றால், அப்போது கூட கேட்டேன். உதயகுமார் சட்டப்பேரவையில் எழுந்து நின்று, விடாமல் “தவழ்ந்து” என்ற வார்த்தையை எடுத்துவிடுங்கள்…. வேண்டாம்… என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் சொன்னேன். யாரையாவது குறிப்பிட்டு நான் பேசியிருப்பதாக நீங்கள் கருதினால், யார் என்று சொல்லுங்கள். நான் எடுத்துவிடுகிறேன். அதற்கு நானே சிபாரிசு செய்கிறேன் என்று சொன்னேன். உட்கார்ந்துவிட்டார். இதுதான் நடந்தது. இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கும் மேலாக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. அந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு நாளும் நம்முடைய திராவிட மாடல் அரசின் சார்பில் மானியக் கோரிக்கைகளை விவாதித்து அதற்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் நேரத்தில் என்னென்ன திட்டங்களையெல்லாம் சொல்லியிருக்கின்றோம். அதைத் தொடர்ந்து 110-விதியைப் பயன்படுத்தி என்னென்ன பணிகளையெல்லாம் நாம் நிறைவேற்றப்போகிறோம். அதற்குப் பிறகு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் நீங்கள் தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில் நன்றாகப் பார்த்திருப்பீர்கள். ஆகவே, இன்றைக்கு மற்ற மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியை நாம் இன்றைக்கு நடத்திக்கொண்டிருக்கிறோம்.

உலகத்திற்கே வழிகாட்டும்

தி.மு.க. அரசு

தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாம் சொல்லியிருக்கிறோமோ… அந்த வாக்குறுதிகளை படிப்படியாக இன்றைக்கு எப்படியெல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்போது சொல்லப்பட்டிருக்கும் அந்த உறுதிமொழிகளும் விரைவாக நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றப்பட்டு நான் உறுதியோடு சொல்கிறேன் 2026ம் ஆண்டு – இங்கு கூட பேசுகின்றபோது சிலர் சொன்னார்கள். கண்ணப்பன் தான் பேசுகின்றபோது சொன்னார். 200 அல்ல 220 வரும் என்று அவர் சொன்னார். அதில் என்ன கஞ்சம் 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை.

எப்படிப்பட்ட கூட்டணி

வந்தாலும் ஒரு கை பார்ப்போம்

ஏன் என்றால், செல்லும் இடங்களிலெல்லாம் அந்த வரவேற்பைப் பார்க்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்கின்றபோது நான் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்தே செல்கிறேன். அப்போது, மக்கள் திரண்டு வந்து வரவேற்கும் காட்சியைப் பார்க்கும்போது உள்ளபடியே மெய் சிலிர்த்துப்போகிறேன். ஆகவே, நிச்சயமாக, உறுதியாக நம்மை எதிர்க்கக்கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி – எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடுதான் நாம் இன்றைக்கு நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது வருமானவரித் துறையாக இருந்தாலும் சரி அல்லது புலனாய்வுத் துறையாக இருந்தாலும் சரி – சி.பி.ஐ. வைத்து மிரட்டக்கூடியதாக இருந்தாலும் சரி – அமலாக்கத்துறை என்ற அந்த துறையாக இருந்தாலும் சரி இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் – ஏனென்றால், நெருக்கடியைப் பார்த்து வளர்ந்திருக்கக்கூடியவர்கள் நாம்.

சர்வாதிகாரத்திற்கு

துணை போக மாட்டோம்

தலைவர் கலைஞர் 1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்துகின்றபோது அதை எதிர்த்து இந்தியாவில் முதல் குரல் கொடுத்தவர் நம்முடைய தலைவர். ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நேரத்தில் டெல்லியிலிருந்து இரண்டு தூதுவர்கள் வந்தார்கள். கோபாலபுரத்திற்கு வந்தார்கள். தலைவர் கலைஞரின் இல்லத்திற்கு வந்தார்கள். நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமல் இருக்க வேண்டும். உங்கள் ஆட்சிக்கு சில நாட்கள்தான் இருக்கிறது. சில மாதங்கள்தான் இருக்கிறது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் சில மாதங்கள் இல்லை. பல மாதங்கள் நீங்கள் ஆட்சியில் இருக்கலாம். ஆகவே, நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் போதும் என்று சொல்கின்றபோது, கலைஞர் சொன்னார். ஆட்சி அல்ல. எங்கள் உயிரே போனாலும் நாங்கள் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்க மாட்டோம் – ஜனநாயகத்தைப் காப்போம் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அனுப்பி வைத்துவிட்டு அடுத்துநாளே சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருக்கக்கூடிய இந்த கூட்டத்தில் நெருக்கடி நிலையை எதிர்த்து தீர்மானம் போட்டார்.

7வது முறையும்

தி.மு.க. ஆட்சிதான்

சிறைப்பிடித்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தியாவில் இருக்கும் தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நெருக்கடி நிலையை ரத்து செய்ய வேண்டும். எமர்ஜன்சியை ரத்து செய்ய வேண்டும் என்று அன்றைக்கு தீர்மானம் போட்டார். தீர்மானம் போட்ட அடுத்த விநாடியே நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. அதைப்பற்றி கவலைப்படவில்லை. நெருக்கடி காலத்திற்கு பிறகு நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். தலைவர் தலைமையில் 5 முறை ஆட்சிக்கு வந்தோம். அதற்குப் பிறகு 6-வது முறையாக என்னுடைய தலைமையில் நீங்களெல்லாம் ஆட்சியை உருவாக்கித்தந்து இருக்கிறீர்கள். 7-வது முறையும் இந்த ஆட்சியை தொடர வைப்பீர்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உண்டு. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மண விழா நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *