செய்திகள்

ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: குளிக்க, பரிசல் இயக்க இன்றும் தடை

Makkal Kural Official

தருமபுரி, அக். 16–

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 3 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாப்பாளையம், கேரட்டி, கெம்பா கரை , ராசிமணல், மொசல் மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டொல்லா நீரோடையில் வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதேபோல் கர்நாடக மாநில காவிரி கரையோர வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

18,000 கன அடியாக உயர்வு

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வரத்து காரணமாக புதன்கிழமை மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தமிழ்நாடு, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஓகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பினால் ஒகேனக்கல்லின் அருவிகளான பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீா் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *