செய்திகள்

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை; வெள்ள அபாய எச்சரிக்கை

20 ஆயிரம் கன அடி நீர்வரத்து

தர்மபுரி, ஜூலை.28-

கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வரத்தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரத்து 362 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 3வது நாளாக தடை நீட்டிக்கிறது. தற்போது அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர். இதனால் மெயின்அருவிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளான முதலைபண்ணை, ஊட்டமலை, ராணிப்பேட்டை, நாடார்கொட்டாய், கூத்தப்பாடி ஆகிய பகுதிகளிலும், காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளிலும் வாகனத்தில் ஒலிப்பெருக்கியை கட்டி சென்று பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர். அருவிகள் மற்றும் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *