தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் வலியுறுத்தல்
சென்னை, ஜன. 7–
நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான, உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர் வி. கார்த்திகேயன் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை ஐகோர்ட்டில் ஒட்டுமொத்த நீதிபதி பதவியிடங்களின் எண்ணிக்கை 75. ஆனால் தற்போது 66 நீதிபதிகள் உள்ளனர். இந்தநிலையில் இந்த ஆண்டு சில நீதிபதிகள் ஓய்வுபெற உள்ளனர். எனவே சென்னை ஐகோர்ட்டில் அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் ஏற்படவுள்ளது, நீதிபதிகள் பதவிக்கான காலியிடங்களை விரைந்து நிரப்பினால் மக்களுக்கு விரைவான மற்றும் தடையற்ற நீதி நிர்வாகத்தை வழங்க முடியும்.
எனவே, தலைமை நீதிபதி மற்றும் கொலீஜியம் நீதிபதிகள் சிறுபான்மையினர்,பெண்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் பெயர்களை அவர்களின் தனிப்பட்ட சட்ட அறிவு, நேர்மை, திறமையின் அடிப்படையில் பரிசீலிக்குமாறு ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமூதாயத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பதவிக்கான பெயர்களை கொலீஜியம் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யும் போது, நீதித்துறையில் சமூக பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.