தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
சென்னை, ஜன. 28–
தமிழ்நாட்டில் 20 இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவரை சென்னை புரசைவாக்கத்தில் இன்று கைது செய்தனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகக் கிடைத்துள்ள தகவலின்கீழ் இந்த சோதனை நடைபெறுகிறது..
சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள திருமுல்லைவாசல் பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. பாசித், எல்லை கட்டிருப்பு தெருவில் வசித்து வரும் சாதிக் ஆகியோரின் வீடுகள் உள்பட 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்த அல்பாசிக் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். இவர் மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில் 8 மாதங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்துக்கொண்டே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் அல்பாசிக் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அல்பாசிக்கை கைது செய்துள்ளனர்.