சென்னை, ஜன. 10–
ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கிழக்கு மருதூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி என்பவரின் மகன் சுரேஷ் (வயது 43) என்பவர் நேற்று முன்தினம் (8–ந் தேதி) மாலை 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக மேற்படி கிராம ஏரியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சுரேசின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()





