சென்னை, மார்ச் 20–-
தமிழக அரசின் பட்ஜெட் ஏமாற்றமும் கலந்து இருக்கிறது என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-–
ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக ‘பட்ஜெட்’. அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெற பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுவதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன.
அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகச் சொன்னதுதான் அது. மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். அது வெறும்சொல்லாகப் போனதே ஆதங்கம். கியாஸ் சிலிண்டர் விலையைக் குறைக்கும் அறிவிப்பிருக்கும் என எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம். இப்போது தரப்பட்டிருக்கும் திட்டங்களாவது நடைமுறைக்கு வருமா? என்று சாமானிய மக்கள் சந்தேகம் கொண்டால் அது நியாயம்தானே? சொல் அல்ல, செயல் என்று காட்டும் அரசே மக்கள் நம்பிக்கையைப் பெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.