செய்திகள்

ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல்: 24 பேர் பலி

Makkal Kural Official

சனா, மார்ச் 16–

ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியில் கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிற கப்பல்கள், விமானம் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்கர்களுக்கு எதிராக கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தீர்க்கம் நிறைந்த மற்றும் சக்தி வாய்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.

24 பேர் பலி

இதனை தொடர்ந்து, விமானந்தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டு சென்றன. இதுபற்றிய வீடியோவும் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, ஏமனில் நடந்த வான்வழி தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, ஏமனின் சனா நகரில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் காயமடைந்தனர். சாடா மாகாணத்தில் நடந்த தாக்குதலில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 14 பேர் காயமடைந்தனர்.

மேலும் இந்த தாக்குதல் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹவுதிக்கு ஆதரவு அளித்து வரும் ஈரானுக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஹவுதிக்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என கூறினார். மத்திய கிழக்கு பகுதியில் இது மிக பெரிய ராணுவ நடவடிக்கையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *