செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் கைது

இலங்கை கடற்படை அட்டூழியம்

நாகப்பட்டினம், டிச.10–

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்திய பெருங்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி இருக்கிறது. தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளையும் கடற்படை அபகரித்து வருகிறது. தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும், அவர்களின் படகுகளை திரும்பி தர மறுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், நாகையன், திவ்யநாதன், மாயவன், பாக்கியராஜ், சக்திவேல், மணிகண்டன், ராமச்சந்திரன், கோதண்டபானி, ராமச்சந்திரன், செல்வமணி ஆகிய 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்தனர். அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டு கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆச்சியம்மாள் என்ற விசைப்படகும் அதில் இருந்த 13 மீனவர்களும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது படகும் கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *