ராமேஸ்வரம், டிச. 24–
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை இன்று அதிகாலை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. மேலும் மீனவர்கள் சென்ற 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த இருதயம் (59), ஆரோக்கியதாஸ் (44), அந்தோணியார் அடிமை (64), ரோங்கான்ஸியான் (53), முனியாண்டி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (60), ராமன் (52), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (40) உள்ளிட்ட 8 பேரும், மற்றொரு படகிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ், அமல்ராஜ், கிருபாகரன் (56), அருள் தினகரன் (24), மாதவன் (22), அந்தோணி ஐசக் (19) மற்றும் டேவிட் (50), தங்கச்சிமடத்தைச் சேர்ந்த யாக்கோப் (35), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (27) உள்ளிட்ட 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மீனவர்கள் 17 பேரும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.