புதுக்கோட்டை, மார்ச் 23–
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேரை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த 11-ந்தேதி புதுக் கோட்டை, நாகை மாவட்ட மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அதில் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் படகுகள் அந்நாட்டின் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 255 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் ஒரு விசைப்படகிலும், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் மற்றொரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலையில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் அதிவேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.
இதைப்பார்த்ததும் அச்சம் அடைந்த மீனவர்கள் தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். இருந்தபோதிலும் அந்த இரண்டு விசைப்படகுகளையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகுகளுக்குள் தாவிக்குதித்து ஏறினர். பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால், கணவாய் உள்ளிட்ட மீன்களை பறித்துக்கொண்டனர். மேலும் ரோந்து கப்பல் விசைப்படகுகளின் அருகில் வந்ததால் மீனவர்களின் வலைகளும் அறுந்து சேதமடைந்தன.
இதையடுத்து 2 விசைப்படகுகளில் இருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 42), கலையசரசன் (24), லோகேஸ்வரன் (24), சக்தி (25), பிரபு (35), சுந்தரமூர்த்தி (45), ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முருகானந்தம் (42), பாரதிதாசன் (35), ரவி (25), சசிக்குமார் (40), விசாலிங்கம் (46), மயில்ராஜன் (23) ஆகிய 12 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் தங்கள் கப்பலுடன் இணைத்து மீனவர்களின் விசைப்படகுகளையும் இழுத்து சென்றனர்.
பின்னர் அவர்களை இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மயிலட்டி கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற படகில் 4 மீனவர்கள் மட்டுமே டோக்கன் வாங்கி சென்றதாகவும், மற்ற இரண்டு பேர் அனுமதியின்றி கடலுக்கு சென்றவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இதற்கிடையே மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்த மற்ற மீனவர்கள் அவசரம் அவசரமாக கிடைத்த மீன்களுடன் பாதியிலேயே கரை திரும்பினர். கைதான மீனவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து கைதான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.