தலையங்கம்
ஏப்ரல் 22 அன்று ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் 26 பேரின் உயிரைப் பறித்தது. இறந்தவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள். இது கொடிய பயங்கரவாதத் தாக்குதல் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் இப்பகுதியில் நிலவும் பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2019ல் 370–வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத செயல்களில் இதுவும் ஒன்றாகும்.
லஷ்கர்-இ-தொய்பாவின் சதியாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்திருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இப்படி ஓர் கொடூரம் அரங்கேறியுள்ளது.
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புலனாய்வு தீவரமாகி விட்ட நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஆக, தற்போதைய தாக்குதலும் சர்வதேச நிகழ்வுகளோடு, தொடர்புடைய பின்னணியில் நடந்து இருப்பதை மறந்து விடக்கூடாது.
சமீபத்திய தாக்குதல் பாகிஸ்தான் இராணுவ ஸ்தாபனம் எந்த அளவிற்கு ஜிகாத் அமைப்பைக் கட்டுப்படுத்துகிறது என்பது எடுத்துக்காட்டுகிறது என்று வெட்டவெளிச்சம் ஆகி இருக்கிறது.
பாகிஸ்தானி ராணுவம் அழுத்தத்தின் காரணமாக அவ்வப்போது தீயசக்திகளின் நடவடிக்கைகளை குறைந்தாலும், அவர்கள் ஜிகாத் உள்கட்டமைப்பை முழுவதுமாக கட்டுப்படுத்தவே முடியாது என்பதையும் புரிய வைக்கிறது.
2000 ஆம் ஆண்டு சட்டீசிங்புரா படுகொலைக்குப் பின்னர் காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. இந்தச் சம்பவத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் அரசு முறை பயணத்தின் போது 2000 மார்ச் 20 அன்று அனந்த்நாக் மாவட்டத்தின் சட்டீசிங்புரா கிராமத்தில் 36 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
2024 ஜூன் 9 அன்று, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்ற நாளில் தீவிரவாதிகள் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 2024 அக்டோபரில், காந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் உள்ளூர் மருத்துவர் மற்றும் புலம்பெயர்ந்த 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தடை செய்யப்பட்ட அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (டிஆர்எஃப்) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருந்தது.
இந்நிலையில், அமைதியை மீட்டெடுக்க கீழ்க்கண்ட பல்முக நடவடிக்கைகள் அவசியமாகின்றன:
பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு மேம்பாடு: சுற்றுலா மையங்களில் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவு வலையமைப்புகளை உருவாக்க வேண்டும். AI மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொடர் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
வழித்தடங்கள் பாதுகாப்பு: முக்கிய சுற்றுலா வழிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பாதுகாப்புத் துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
தடைவிலக்கு மற்றும் விரைவான நீதிமுறை: குற்றவாளிகளை விரைந்து பிடித்து, விசாரணை மற்றும் தண்டனை நடவடிக்கைகளை நீதியுடனும் வேகத்துடனும் நடத்த வேண்டும்.
பாகிஸ்தான் மேல் சர்வதேச அழுத்தம்: அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்புகளை கலைக்க வலியுறுத்தவேண்டும். தவ்ஹூர் ரானா உள்ளிட்ட குற்றவாளிகளை துருவிதுருவி விசாரிக்கக் கூடாது என பயமுறுத்தல் எச்சரிக்கை மேலும் அல்லவா இந்த தாக்குதல் சம்பவம் இருக்கிறது.
இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைப்பு: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். இது பயங்கரவாத குழுக்களில் இளைஞர்கள் சேர்வதை தடுக்க உதவும்.
மாற்று கருத்து பரப்பல்: சமூக ஊடகங்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து அமைதி, ஒற்றுமை மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்தும் கருத்துப்பரப்பல் நடத்த வேண்டும்.
சமீபத்திய இந்த பஹல்காம் தாக்குதல் ஒரு தற்காலிக அச்சுறுத்தலல்ல. இது நமது எல்லையில் நிலை கொண்டு இருக்கும் கரும் போர் , இந்தக் கரைபடிந்த அத்தியாயம் முடிவுரை எழுத மோடியின் அரசு எடுக்க இருக்கும் நகர்வுகளை உலகம் உன்னிப்பாகவே கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறது.